Headlines News :

Meenakam News World

Home » , , , , » வட இலங்கை மக்களுக்கு போதிய சர்வதேச உதவி கிடைப்பதில்லை

வட இலங்கை மக்களுக்கு போதிய சர்வதேச உதவி கிடைப்பதில்லை

Written By Eve on Thursday, September 29, 2011 | 3:42 AM

பெரும் சிரமங்களை எதிர்கொண்டுவரும் வட இலங்கை மக்களுக்கு போதிய சர்வதேச உதவி கிடைப்பதில்லை என இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.இலங்கையில் முன்பு யுத்தப் பிரதேசங்களாக இருந்த இடங்களில் சாமானிய மக்கள் படுகின்ற கஷ்டங்கள் பற்றி இலங்கையின் செஞ்சிலுவைச் சங்கம் குரல்கொடுத்துள்ளது.

யுத்தத்துக்கு பின் மீள்குடியேறிவருவோர் பெரும்பான்மையாக இருந்துவரும் இப்பிரதேசங்களில் லட்சக்கணக்கான மக்களுக்கு அடிப்படையான வசதிகள்கூட இல்லை என்றும், சர்வதேச கொடையாளி நாடுகளும் இவர்களுக்கு போதிய அளவு உதவுவதில்லை என்றும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.

யுத்தம் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும், வடக்கில் ஒரு லட்சத்து அறுபதாயிரத்துக்கும் அதிகமான குடும்பங்களுக்கு நிரந்தர வீடும், வாழ்வாதாரமும், குடிநீர் கழிப்பறை வசதிகளும் உடனடியாகத் தேவைப்படும் நிலையே இருந்துவருவதாக செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் ஜகத் அபெய்சிங்க கூறினார்.

இலங்கையிலிருந்து மனித உரிமை பிரச்சினைகள் தொடர்ந்து காதில் விழுந்து வருவதால், கொடையாளி நாடுகள் உதவிகளை வழங்கத் தயங்குகின்றனவோ என்று தாங்கள் அஞ்சுவதாக அவர் தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கத்தின் மீது அடிக்கடி மனித உரிமை தொடர்பான விமர்சனங்கள் எழுந்ததால், சர்வதேச சமூகத்தின் உதவி முயற்சிகள் நீர்த்துப் போயுள்ளன என்றும் அவர் விமர்சித்திருந்தார்.
மறுப்பு

ஆனால் செஞ்சிலுவை சங்கத் தலைவரின் விமர்சனத்தை தாம் ஏற்க முடியாது என இலங்கையின் முக்கியக் கொடையாளில்களில் ஒன்றான ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைப் பிரதிநிதி பெர்னார்ட் சேவெஜ் தெரிவித்துள்ளார்.

மனிதாபிமான உதவிகள் வழங்கக் தாங்கள் தயங்குவதில்லை என அவர் கூறினார்.

இலங்கையில் மனிதாபிமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதை ஐரோப்பிய ஒன்றியம் எப்போதும் ஆதரித்து வரவே செய்கிறது என்றும், உறைவிடம், வாழ்வாதாரம், நிரந்தர வீடுகள் தொடர்பாக இலங்கையில் அடுத்த இரண்டு வருடங்களில் முன்னெடுக்கப்படுகின்ற உதவித் திட்டங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் நிதி உதவி வழங்கி வரவே செய்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கையின் அரசியல் நிலவரம், மனித உரிமைகள் நிலவரம் இவற்றையெல்லாம் கண்டு மனிதாபிமான உதவிகள் விஷயத்தில் மாற்றங்கள் வர தாங்கள் அனுமதிப்பதில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
உதவிகள் குறைந்துவருகின்றன

ஆனாலும் கொடையாளி நாடுகள் வழங்கும் உதவிகள் குறைந்து வரத்தான் செய்கின்றன.

ஐ.நா.மன்றம் மிகச் சமீபத்தில் வெளியிட்ட மனிதாபிமான உதவிப் பணிகள் பற்றிய அறிக்கையில், இலங்கை இந்த வருடம் ஐ.நா. முன்னெடுக்கவுள்ள உதவித் திட்டங்களுக்கு தேவைப்படும் நிதியில் சர்வதேச கொடையாளிகளிடம் இருந்து நான்கில் ஒரு பங்கு நிதிதான் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.(பி.பி.ஸி)

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger