இந்தியாவிலேயே தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்கிறது என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் சென்னையில் தெரிவித்துள்ளார்.
ஒரு நாள் விஜயமாக புதன்கிழமை(20.7.11) சென்னை வந்திருந்த அவர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவையும் சந்தித்து பேசியுள்ளார்.அப்போது இலங்கை விடயம் தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக தமிழக அரசின் செய்திக் குறிப்பு கூறுகிறது.
“வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவை நிர்வகிப்பதில் அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்கிற்கின்றனர் நல்லிணக்கத்திற்கு முயலும் அண்டைநாடான இலங்கைக்கும் இது ஒரு நல்ல முன்னுதாரணமாக இருக்கவேண்டும்” என்றும் ஹிலாரி கிளிண்டன் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் போர் முடிந்து இரண்டு வருடங்கள் ஆகியுள்ள நிலையில், அங்கு தமிழர்கள் மீண்டும் திரும்புவது தொடர்பில், பல்வேறு திட்டங்கள் ஆராயப்பட்டு வருவதாகவும் ஜெயலலிதாவிடம் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தியர்களுக்கு முன்னர் இருந்த அளவுக்கு மீண்டும் வேலை தொடர்பான விசாக்களை வழங்க அமெரிக்கா முன்வரவேண்டும் எனவும் ஹிலாரி கிளிண்டனிடம் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் படித்தவர்கள் மிக அதிகமாக இருக்கிறார்கள் என்று சுட்டிக்காட்டிய ஹிலாரி கிளிண்டன், தொழிற்துறையிலும் உலகமயமாதலிலும் தமிழகம் முன்னணியில் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் இந்தியா, சீனா, மற்றும் அமெரிக்கா ஆகியவை எதிர்வரும் காலங்களில் இணைந்து செயல்படவேண்டும் எனவும் வலியுறுத்தினார் கிளிண்டன்.
மூன்று நாடுகளுமே தீவிரவாதிகளின் வன்முறையினால் ஏற்படும் ஆபத்துக்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்றார் அவர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அமெரிக்காவுக்கு வருமாறு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் அழைப்பு விடுத்ததாகவும் தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment