சிறுமியை கடத்தி சென்று இரண்டரை ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்த கொடுமை தற்போதுதான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட அந்த சிறுமி உமாவுக்கு (பெயர் மாற்றம்) மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள வாகைக்குளம் கிராமம்தான் சொந்த ஊர்.
12 வயது இருக்கும் போது அதே ஊரை சேர்ந்த உறவினர் ராஜ்குமார் என்பவருக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர். பக்குவம் அடையாத அந்த பெண், திருமண வாழ்க்கையை வெறுத்து கணவரைப் பிரிந்து பெற்றோர் வீட்டுக்கு மீண்டும் வந்து விட்டாள்.
வாழ்க்கையை நடத்த வேண்டுமே என்ற நிர்ப்பந்தத்தில் திருமங்கலத்தில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலைக்கு சென்றாள் உமா. ஜவுளிக்கடையில் வேலை பார்த்த ஒரு பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கத்தால், தான் பட்ட கஷ்டம், குடும்ப பிரச்சனைகளை சொல்லி வேதனை அடைந்துள்ளாள். உமாவின் கஷ்டத்தை தோழி தனது தாயாரிடம் கூறியுள்ளார்.
இந்த சூழ்நிலையில் ஒரு நாள் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்ப பேருந்து நிலையத்தில் உமா நின்று கொண்டிருந்தபோது தனது மணி பர்சை தவற விட்டுவிட்டாள். ஊருக்கு செல்ல பணம் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த உமாவுக்கு தோழியின் தாயார் கண்ணில் தென்பட்டுள்ளார்.
ஊருக்கு செல்ல பயணம் கேட்ட உமாவை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டாள் தோழியின் தாயார். பார்க்க அழகாக இருந்த உமாவை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முடிவு செய்த தோழியின் தாய், நல்ல சம்பளத்தில் வேலைக்கு சேர்த்து விடுவதாக கூறி தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளாள்.
உமாவை தன் ஆசை வளையத்துக்குள் கொண்டு வந்த தோழியின் தாய், மதுரைக்கு அழைத்துச் சென்று விபசாரத்தில் ஈடுபடுத்தியுள்ளாள். அப்போதுதான் தான் ஏமாற்றப்பட்டோம் என்பதை உணர்ந்துள்ளாள் உமா. விபசாரம் செய்ய மறுத்த உமாவை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபட வைத்தார் தோழியின் தாய். அரசியல்வாதிகள் முதல் போக்கிரிகள் வரை அனைத்து காமக் கொடூரர்களுக்கும் இரையானாள் உமா.
இப்படி விபசாரத்தில் தொடர்ந்து ஈடுபடுத்தப்பட்ட உமா பின்னர் ஒவ்வொருவருக்காக விற்கப்பட்டாள். காரைக்குடியை சேர்ந்த ஒருவர் உமாவை அதிக விலை கொடுத்து வாங்கியதோடு விபசாரத்தில் தள்ளி லட்சக்கணக்கான பணம் சம்பாதித்த கையோடு, வேறொருவருக்கு விற்று விட்டான்.
சென்னை, ராமநாதபுரம், திருச்சி, கோவை, ராமேஸ்வரம் உள்பட பல ஊர்களுக்கு விற்கப்பட்ட உமா, ஒவ்வொரு ஊரிலும் அவளால் பலர் பணம் சம்பாதித்தனர். இரண்டரை ஆண்டுகளில் 200க்கும் மேற்பட்டவர்கள் உமாவை பாலியல் பலாத்காரம் செய்ததோடு பல முக்கிய விபசார ஏஜெண்டுகள் அவளை மாதக்கணக்கில் வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தி பணம் சம்பாதித்துள்ளனர்.
காரைக்குடி பெண் ஏஜெண்டு ஒருவர் உமாவை நேற்று முன்தினம் ராமநாதபுரத்துக்கு அழைத்துச் சென்றபோது தப்பித்த அவள், ராமநாதபுரத்தில் பி.வி.எம். என்ற தொண்டு நிறுவனத்தை சேர்ந்த ரைசுதீன் என்பவரிடம் தஞ்சமடைந்து, தான் சீரழிக்கப்பட்ட விவரத்தை கூறியுள்ளாள்.
ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உமாவை ஒப்படைத்தனர் தொண்டு நிறுவனத்தினர். கடந்த இரண்டரை ஆண்டுகளாக அரசியல்வாதிகள் உள்பட பலரால் சீரழிக்கப்பட்ட கொடுமையை சொல்லி கதறி அழுது இருக்கிறாள் உமா.
புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் திருமங்கலம் கப்பலூரை சேர்ந்த உமா தோழிதின் தாய், கீழக்குயில்குடி சத்யா, திருப்பரங்குன்றம் செல்வி, திருமங்கலம் சந்திரா, காரைக்குடி டி.கே.நகர் ருக்மணி, இன்னொரு பெண், மதுரை கலைச்செல்வி, அவருடைய கணவர் சதீஷ், ராமேஸ்வரம் இளங்கோ, அய்யர், ராமேஸ்வரம் நகரசபை தி.மு.க. தலைவர் அப்துல் ஜலீல், சாத்தான்குளம் சேக், ராமநாதபுரம் ஆனந்தா, மதுரை ஆட்டோ டிரைவர் பாண்டி, ராஜேந்திரன் ஆகிய 14 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
உமாவிடம் நடத்திய விசாரணையில், வலுக்கட்டாயமாக அறையில் அடைத்து வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தியதாகவும், விலை உயர்ந்த சொத்துக்களை தருவதாக ஆசை காட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறியுள்ளாள். தன்னை போலவே ஆந்திராவை சேர்ந்த பல மைனர் பெண்களை இந்த கும்பல் விபசாரத்தில் ஈடுபடுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளாள் உமா.
அண்மையில் இதேப்போன்று கேரளாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பலரின் ஆசைவார்த்தைகளுக்கு ஏமாந்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிகழ்வு அடங்குவதற்குள், மீண்டும் கிளம்பியுள்ள பாலியல் புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பண ஆசை மற்றும் காமாந்தரர்களால் உமா பாதிக்கப்பட காரணமாக இருந்ததும் பெற்றோர்கள்தான்; உருவாகாமல் இருப்பதை தடுப்பதும் பெற்றோர்கள்தான்
No comments:
Post a Comment