இலங்கைக்கு எதிராக கனடா மீண்டும் செயற்படலாம்
Written By Eve on Friday, September 30, 2011 | 11:27 PM
எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஐ.நா. மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தின் போது இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட கனடா மீண்டும் முயற்சிக்கலாம் என்பதால் அதனை எதிர்கொள்வதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம். இலங்கை சிறிய நாடாகவிருந்தாலும் இறைமையுள்ள நாடு. உலக நாடுகள் தாம் நினைத்ததுபோல இலங்கையைப் பந்தாடுவதற்கு அனுமதிக்க முடியாது. என பெருந்தோட்டத்துறை அமைச்சரும், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கலந்துகொண்ட இலங்கைக் குழுவின் தலைவருமான மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இரண்டு முயற்சிகளை முறியடித்து இலங்கை வெற்றி பெற்றிருப்பதாகவும் பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டில் சமாதானத்தை நிலைநாட்டுவதற்கு இலங்கை எடுத்திருக்கும் நடவடிக்கைகளைக் குழப்பும் எந்தவிதமான முயற்சிகளையும் முறியடிப்பதற்கு இலங்கை தொடர்ந்தும் தயாராகவே இருப்பதாகவும் அவர் கூறினார்.ஐக்கிய நாடுகள் மனித உரிமை கள் பேரவையில் சர்ச்சைக்குரிய தருஸ்மன் அறிக்கையைக் கொண்டுவந்து இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நிறை வேற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டமையானது இலங்கைக்குக் கிடைத்த முதல் வெற்றி யென்று தெரிவித்த அமைச்சர், 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத் தொடரில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல் லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை விவாதிப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் முறியடிக்கப்பட்டமையானது இலங்கைக்குக் கிடைத்த இரண்டாவது வெற்றியென்றும் கூறினார்.ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராகத் தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகளை முறியடிக்க இலங்கை எடுத்த பிரயத்தனங்களை விளக்கும் வகையில் ஊடகவியலாளர் மாநாடொன்று நேற்று பெருந்தோட்டத்துறை அமைச்சில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் நிமல் சிறிபால.டி.சில்வா மற்றும் முன்னாள் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர், ஐ.நா. செயலாளர் நாயகத்தால் நியமிக்கப்பட்ட தனிப்பட்ட குழு தயாரித்த சர்ச்சைக்குரிய தருஸ்மன் அறிக்கையைக் கொண்டுவருவதற்கு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தலைவர் முயற்சிகளை எடுத்தார். இவர் எடுத்த நடவடிக்கையானது மிகவும் பிழையானது என்பதை நாம் ஏனைய நாடுகளின் பிரதிநிதிகளுக்குத் தெளிவாக எடுத்துக் கூறினோம்.இம்முறை இலங்கைக்கு ஏற்பட்ட இந்த நிலைமை எதிர்காலத்தில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் ஏனைய நாடுகளுக்கும் ஏற்படும் என்ற விடயத்தை நாம் தெளிவாக உறுப்பு நாடுகளுக்கு விளக்கிக் கூறினோம். உறுப்பு நாடுகள் அதனை ஏற்றுக்கொண்ட துடன் எமக்கு ஆதரவு வழங்கின. ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் தலைவி எடுத்த இத்தகைய முயற்சியானது பிழையானது என்பதை ஏற்றுக்கொண்டு எமக்கு ஆதரவாக எட்டு நாடுகள் கைச்சாத்திட்டு கடிதமொன்றையும் வெளி யிட்டன. இது எமக்குக் கிடைத்த முதல் வெற்றி. அதேநேரம், இலங்கை தொடர்பாக உத்தியோகபூர்வமற்ற சந்திப்பொன்றை ஏற்பாடு செய்த கனடா, எதிர்வரும் மார்ச் 2012 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடரில் கற்றுக்கொண்ட பாடங் கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை விவாதத்துக்கு எடுத்துக்கொள் வது பற்றிய தீர்மானமொன்றை எடுக்க முயற்சித்தது.இக்கூட்டத்தில் நாமும் கலந்துகொண்டு எமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி னோம். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை இன்னமும் வெளியாக வில்லை. இந்த நிலையில் எவ்வாறு இந்த அறிக்கையை விவாதத்துக்கு எடுத்துக்கொள் வதா இல்லையா எனத் தீர்மானிக்க முடியும் என்ற எமது நிலைப்பாட்டை அவர்களுக்கு எடுத்துக் கூறினோம். கனடா ஏற்பாடு செய்திருந்த இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஏனைய நாடுகளைத் தனித்தனி யாகச் சந்தித்தும் விளக்கினோம். இதன் பின்னர் கனடாவின் முயற்சிக்கு ஏனைய நாடுகளின் ஆதரவு இல்லையென்பது புலனாகியது.எனினும், எதிர்வரும் மார்ச் மாத கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான நட வடிக்கைகளில் ஈடுபட கனடா மீண்டும் முயற்சிக்கலாம் என்பதால் அதனை எதிர்கொள்வதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம். இலங்கை சிறிய நாடாகவிருந்தாலும் இறைமையுள்ள நாடு. உலக நாடுகள் தாம் நினைத்ததுபோல இலங்கையைப் பந்தாடுவதற்கு அனுமதிக்க முடியாது. குழுவாகச் செயற்பட்டு இலங்கைக்கு எதிரான முயற்சிகளை நாம் முறியடிப்போம் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment