Headlines News :

Meenakam News World

Home » , , , , » பேரறிவாளன், முருகன், சாந்தன் மனமுருக பேட்டி

பேரறிவாளன், முருகன், சாந்தன் மனமுருக பேட்டி

Written By Eve on Wednesday, August 24, 2011 | 9:38 AM

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் என கூறப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் மனமுருக பேட்டியளித்துள்ளனர்.பேரறிவாளன்
கேள்வி:- எந்த நேரத்திலும் தூக்கு அறிவிப்பு வரலாம் என்கிற நிலையை எப்படி எதிர்கொள்​கிறீர்கள்?

பேரறிவாளன்:- முதலில் எங்களுக்காகப் போராடும் அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டு இருக்கிறோம். தூக்குத் தண்டனை அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே மரணத்தின் நிழலில்தான் நிற்கிறோம்.

கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டதில் மரண நிழல் எங்களைப் பெரிதாக சூழ்ந்திருக்கிறது. மக்களின் ஒருமித்த கைகோப்பு எங்களுக்கு மிகுந்த நம்பிக்கையையும் வெளிச்சத்தையும் உருவாக்கி இருக்கிறது.

19 வயதில் உள்ளே வந்தவன். 21 வருடங்கள் இந்தச் சிறையிலேயே பெருவலியோடு கழிகிறது. தூக்கு அறிவிப்பை இந்த வலியில் இருந்து விடுபடும் நாளாக எண்ணி என்னைத் தேற்றிக்கொள்ளும் நிலையில்தான் இருக்கிறேன்.

கேள்வி:- தமிழக மக்களிடம் நீங்கள் சொல்ல நினைக்கும் கருத்து?

பேரறிவாளன்:- அரசியல் பாகுபாடு பார்க்காமல் அனை​வரும் எங்களுக்காகப் போராடுவது எங்களின் கண்ணீரைத் துடைத்து இருக்கிறது. இன உணர்வு மட்டும் அல்லாது, மனிதநேயமும் ஒன்று சேர்ந்த போராட்டம் எங்களை சிலிர்க்க வைத்திருக்கிறது.

பொதுமக்களும் அனைத்துத் தலைவர்களும் ஒரே அணியில் நின்று தூக்குத் தண்டனைக்கு எதிராகப் போராட வேண்டும் என்பதுதான் எங்களின் விருப்பம்.

அனைத்து அரசியல் தலைவர்களும் ஒருமித்த உணர்வோடு திரண்டு தமிழக முதல் அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்தால், நிச்சயம் அவர் எங்களின் விடிவுக்கு வழி செய்வார். அவருடைய குரல் எங்களுக்காக காத்திருக்கும் கயிறை நிச்சயம் அறுத்தெரியும்.

கேள்வி:- தமிழக முதல்வரிடம் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?

பேரறிவாளன்:- மிகுந்த அறிவும் ஆய்ந்தறியும் பேராற்றலும் கொண்டவர் நீங்கள். இந்த வழக்கில் இருக்கும் குளறுபடிகளை நிச்சயம் அறிந்திருப்பீர்கள். அம்மா, மரணம் கோரப்பசியோடு துரத்தும் இந்த நேரத்தில் மட்டும் அல்ல 20.07.07 அன்றே உங்களுக்கு நான் ஒரு கடிதம் எழுதினேன்.

வழக்கில் சிக்குபவர்களுக்கு வசதி இல்லை என்றால், அவர்களின் தரப்பு நியாயம் அம்பலம் ஏறாமல் போய்விடும். அத்தகைய குறைபாடு கொண்ட கட்டமைப்புதான் இன்றைக்கு நிலவுகிறது. என்ன தவறு செய்தோம் என்றே தெரியாமல் இத்தனை நாள் மரணத்தின் மடியில் படுத்துக் கிடப்பவனாகக் கேட்கிறேன்.

தயவுசெய்து தூக்குத் தண்டனைக்கு எதிராகக் குரல் கொடுங்கள் என அந்தக் கடிதத்தில் உங்களிடம் கோரிக்கை வைத்திருந்தேன்.

பிறருக்கு முன்னுதாரணமான சட்டத் திருத்தங்களைக் கொண்டுவருகிற சக்தி உங்களுக்கு மட்டுமே இருக்கிறது. மனசாட்சியின் கண்ணீர்க் குரலாகச் சொல்கிறேன். எங்களுக்குத் தெரிந்து எதுவும் நடக்கவில்லை.

சித்திரிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்காக இத்தனை வருடங்கள் வாடும் எங்களுக்காக உங்களின் ஒற்றைக் குரல் ஒலித்தால் போதும் அம்மா.

கேள்வி:- கருணை மனு நிராகரிக்கப்பட்ட உடன் மரணம் நெருங்கிவிட்டதாக நினைக்கிறீர்களா?

பேரறிவாளன்:- 99-ம் ஆண்டு மனித உரிமை ஆர்வலர் ஹென்றி டிஃபேன் என்னைப் பார்க்க வந்தார். வெளியே வந்தால் என்ன செய்வீர்கள்? எனக் கேட்டார். தூக்குத் தண்டனைக்கு எதிராகப் போராடுவேன் எனச் சொன்னேன்.

காரணம், தூக்கு அறிவிக்கப்பட்ட ஒருவனின் ஒவ்வொரு நிமிடமும் எத்தகையக் கொடூரமானது என்பதை அனுபவப்பூர்வமாக அறிந்தவன் நான்.

வெளி உலகம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்க இப்போது ஆசையாக இருக்கிறது. சிறு குழந்தையின் தவிப்பாக மனது ஏங்குகிறது. எங்​களுக்காகப் போராடும் மக்களை நேரில் பார்த்து கைகூப்பத் தோன்றுகிறது.

ஆனால், ஏற்கனவே பரப்பிய பழிகள் போதாது என சாத்தானின் படைகள் என்கிற புத்தகத்தை நான் அச்சடித்ததாக சிலர் இப்போது கிளப்பிவிடுகிறார்கள். அந்தப் புத்தகத்தை யார் உருவாக்கியது என்பது குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு நன்றாகத் தெரியும். அப்படி இருந்தும் என்னை இட்டுக்கட்டுவது ஏன்?.

ஜோடிக்கப்பட்ட இந்த வழக்கில் ஒருவேளை மரணம் எங்களை வென்றுவிட்டால், கயிற்றின் முன்னால் நின்று நான் சொல்ல நினைப்பது. தூக்குக்குப் பலியாகும் கடைசி ஆள் நானாக இருக்கட்டும் என்பதுதான்.

முருகன்
கேள்வி:- தமிழகத்தில் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் உங்களுக்கு நம்பிக்கை அளிக்கிறதா?

முருகன்:- மரணத்தைவிட மரணத்தின் நாளுக்காகக் காத்திருப்பது கொடுமையானது. அதை ஒவ்வொரு கணமும் அனுபவிக்கும் இந்த சூழலில், மக்களின் ஆதரவுதான் எங்​களை நம்பிக்கையோடு நிமிர வைக்கிறது.

தனித்தனியான போராட்டங்களை முன்னெடுக்​காமல், எங்களுக்காக எல்லோரும் ஒருமித்து நிற்க வேண்டும் என்பதுதான் எங்களின் கோரிக்கை. இதர மாநிலங்களில் தண்ணீர் பிரச்னைக்குகூட அனைத்துக் கட்சிகளும் ஒன்றாகத் திரளுகின்றன.

எங்களின் கண்ணீர் பிரச்னைக்கும் அதேபோல் அனைத்துக் கட்சிகளும் திரண்டு, முதல்வரிடம் கோரிக்கை வைக்க வேண்டும். மூன்று உயிர்களுக்காக மொத்த தமிழகமும் கைகோத்து நின்றதை காலக் கல்வெட்டு தமிழனின் உயர்ந்த உணர்வாகப் பதிவு செய்ய வேண்டும்.

கேள்வி:- தமிழக மக்களிடம் ஏதாவது சொல்ல விரும்பு​கிறீர்களா?

முருகன்:- எங்கள் மீதான குற்றச்சாட்டுகளில் துளியும் உண்மை இல்லை. மரணத்துக்குப் பயந்து இந்த வார்த்தை​களைச் சொல்லவில்லை.

எங்களின் கவனத்துக்குத் தெரியாமல் நடந்த சம்பவத்துக்கு இத்தனை வருட சிறைவாசமே பெரிய கொடுமை. ஒப்புதல் வாக்குமூலத்தில் நாங்களே பல விஷயங்களை ஒப்புக்கொண்டதாக விசாரணை அதிகாரிகள் சொல்கிறார்கள்.

ஆனால், ஒப்புதல் வாக்குமூலத்தை அவர்களே தயாரித்து எங்களை அதில் கையெழுத்துப் போடச் சொன்னார்கள். அதற்காக அவர்கள் செய்த சித்ரவதைகளை வார்த்தைகளால் சொல்ல முடியாது.

மரணக் கொட்டடியின் நெருக்கடிகள் எங்களுக்குப் பழகிப்போனாலும், என்றைக்காவது ஒருநாள் வெளியே வருவோம் என்கிற நம்பிக்கை இருக்கிறது. உறவுகளின் உணர்வுகளால் அந்த நம்பிக்கைப் பலப்படுகிறது. ஒரே வார்த்தையில் எங்களின் உணர்வைச் சொல்வதானால் “நன்றி´´.

ம.தி.சாந்தன்
கேள்வி:- ராஜீவ் கொலை விசாரணையில் நிறைய குளறு​படிகள் நடந்ததாகச் சொல்கிறார்களே?

சாந்தன்:- கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத நாங்கள் குற்றவாளிகளாக நிற்கிறோம். இந்த வேதனையைக் கொஞ்சம் விளக்கமாகச் சொன்னால்தான் புரியும்.

கொழும்பு வழியாக வெளிநாட்டுக்குப் பயணம் மேற்கொள்வது பாதுகாப்பானது அல்ல என்பதாலேயே நான் இந்தியாவுக்கு வந்தேன். இலங்கை அரசு தந்த உண்மையான கடவுச்சீட்டுகளுடன் வந்தேன்.

அதை குற்றப் புலனாய்வுத் துறை கைப்பற்றி உள்ளது. ராஜீவ் போன்ற பெரிய தலைவரைக் கொல்ல வருபவன் தன்னைப் பற்றிய தகவலைச் சொல்லும் உண்மையான கடவுச்சீட்டுடன் வருவானா?.

நான் சுமக்கும் மரண தண்டனைக்குப் பெயர் குழப்பமும் ஒரு காரணம். இந்த வழக்கில் கைதாகி விடுதலையான இரும்பொறை என்பவரை நான் ராஜீவ் இறப்பதற்கு முன்னர் சந்தித்ததாகவும், 15 ஆயிரம் பணம் கொடுத்ததாகவும், முக்கியமான ஒரு நபரைக் கொல்லப் போகிறோம் என்று சொன்னதாகவும் மரண தண்டனையை உறுதி செய்தபோது மாண்புமிகு நீதிபதி கே.டி.தோமஸ் அவர்கள் கூறுகிறார்.

ஆனால், மாண்புமிகு நீதிபதி வாத்வா அவர்கள் அது இறந்துபோன எதிரி திருச்சி சாந்தன் என்கிறார். இன்னொருவர் சொன்னதை நான் சொன்னதாகச் சொல்லி என்னைத் தூக்கில் நிறுத்தப் போகிறார்கள்.

நானும் சிவராசனும் நளினியை மிரட்டி இந்த​சதிக்கு உடன்பட வைத்தோம் என்று நீதிபதி தோமஸ் சொல்கிறார். ஆனால், நீதிபதி வாத்வா, ராஜீவ் இறந்த அடுத்த நாள்தான் நளினியை சாந்தன் அறிவார் என்கிறார்.

நான் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உளவுப் பிரிவில் முக்கியமான ஆள் என்பதற்கு ஆதாரம் இருப்பதாக நீதிபதி தோமஸ் தீர்ப்பில் சொல்கிறார். இவை எதற்கும் ஆதாரம் இல்லை.

விடுதலையான இரும்பொறையுடன் நான் சம்பந்தப்பட்டிருந்தேன் என்றோ, நளினியை மிரட்டினேன் என்றோ குற்றப் புலனாய்வுத் துறை கூடச் சொல்லவில்லை.

ஒருவர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை அவரிடம் கூறி அவரது பதிலை விசாரணை நீதிமன்றம் பதிவு செய்ய வேண்டும். ஆனால் என் விஷயத்தில் இது செய்யப்படவில்லை.

சிவராசனின் பணத்தை முதலில் காந்தன் என்பவர் கையாண்டார். அவரிடம் இருந்து நான் அந்தப் பொறுப்பினை எடுத்துக் கொண்டதாக நீதிபதி வாத்வா அவர்கள் தீர்ப்பில் கூறுகிறார்.

சிவராசனின் பணத்தை நான் பாதுகாத்து கொடுத்ததாகவோ கையாண்டதாகவோ விசாரணை நீதிமன்றம் என்னிடம் கேட்டுப் பதிவு செய்யவில்லை.

இப்படி எல்லாம் குளறுபடிகள் நடந்தன. குளறுபடிகளே எங்களுக்கான முடிவுப் படிகளாக மாறிவிட்டன.

கேள்வி:- கருணை மனு நிராகரிக்கப்பட்டது தெரிந்த உடன் என்ன நினைத்தீர்கள்?

என் தந்தை ஆறுமுகம் தில்லையம்பலம் அவர்களின் நினைவு வந்தது. அவருக்கு இப்போது 70 வயது. இறுதிக்கட்டப் போருக்குப் பிறகு அவரிடம் இருந்து எந்தத் தகவலும் இல்லை. அதற்கு முன்னர் அங்கு விவசாயம் செய்துகொண்டு இருந்தார். அவர் எப்படி இருக்கிறார் என்கிற கவலை என்னைப் பெரிதாக வருத்துகிறது.

பெற்ற தகப்பன் இருக்கிறாரா இல்லையா என்பதை நினைத்து அழுவதா?. நான் இருப்பேனா மாட்டேனா என்பதை நினைத்து அழுவதா?. இந்த அப்பனும் மகனும் விதியெனும் கையில் சிக்கிய விளையாட்டுப் பொம்மைகளாய் அல்லாடுகிறோம்.

நன்றி: ஜூனியர் விகடன்

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger