Headlines News :

Meenakam News World

Home » , , , , , , » அமைச்சர் டக்ளஸை கைது செய்யாதது ஏன்? நீதிமன்றம் மத்திய அரசிடம் கேள்வி

அமைச்சர் டக்ளஸை கைது செய்யாதது ஏன்? நீதிமன்றம் மத்திய அரசிடம் கேள்வி

Written By Eve on Friday, August 5, 2011 | 6:17 AM

இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட இலங்கை அரசியல்வாதி டக்ளஸ் தேவானந்தாவை இந்திய விஜயத்தின்போது ஏன் கைது செய்யவில்லை என மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

1986ம் ஆண்டு நவம்பர் 1 ம் தேதி சென்னையில் டக்ளஸ் தேவானந்தா தங்கி இருந்த போது, சூளைமேட்டில் திருநாவுக்கரசு என்பவரை சுட்டுக் கொன்றார். மேலும் 4 பேரை காயப்படுத்தினார். இந்த சம்பவத்தில் டக்ளஸ் கைது செய்யப்பட்டார். சில மாதங்கள் கழித்து ஜாமீனில் அவர் வெளியே வந்தார்.

வெளியே வந்த பிறகு, 1988 ம் ஆண்டு நவம்பர் மாதம் 10 வயது சிறுவனை கடத்திச் சென்று, 7 லட்சம் கொடுத்தால் விடுவேன் என்று மிரட்டினார் என்று கீழ்ப்பாக்கம் பொலிஸில் டக்ளஸ் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டார்.

1989 ம் ஆண்டு தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பிறகு அவர் இலங்கைக்கு தப்பிச் சென்றார். இதனையடுத்து டக்ளஸ் தேவானந்தா தேடப்படும் குற்றவாளியென நீதிமன்றம் தெரிவித்தது.

இந்த நிலையில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட, இலங்கையில் அமைச்சராக இருக்கும் டக்ளஸ் தேவானந்தா இலங்கை அதிபர் மஹிந்த  ராஜபக்சவுடன் கடந்த ஆண்டு இந்தியா சென்றிருந்தார்.  அப்போது பிரதமர் மன்மோகன் சிங் டக்ளஸ் தேவானந்தாவுக்கு கைலாகு கொடுத்து வரவேற்றதுடன் விருந்துபசாரமும் அளிக்கப்பட்டது.

மேலும் தேடப்படும் குற்றவாளியுடன் எப்படி பிரதமர் இப்படி விருந்துபசாரம் செய்து பாராட்டிப் பேசலாம் என்று ஊடகங்கள் கேள்வி எழுப்பியிருந்தன.

இந்த நிலையில், டக்ளஸை நாடு கடத்தக் கோரி தொடரப்பட்டுள்ள ஒரு வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், டில்லிக்கு வந்தபோது டக்ளஸ் தேவானந்தாவை மத்திய அரசு ஏன் கைது செய்யவில்லை. தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவரை கைது செய்ய முடியாத நிலை ஏன் ஏற்பட்டது என்பது குறித்து விளக்கமளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger