Headlines News :

Meenakam News World

Home » , , , , , » சீனா பெருந்தொகைப் பணத்தை மானியமாக சிறிலங்காவுக்கு அள்ளி வழங்குவதேன்?

சீனா பெருந்தொகைப் பணத்தை மானியமாக சிறிலங்காவுக்கு அள்ளி வழங்குவதேன்?

Written By Eve on Monday, July 18, 2011 | 3:30 AM

சீனாவானது முன்னெப்போதும் இல்லாதவாறு கடந்த மார்ச்சில் 9 மில்லியன் அமெரிக்க டொலர்களை சிறிலங்கா அதிபருக்கு மானியமாக வழங்கியுள்ளது.

"சிறிலங்கா , சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் நட்புறவைக் கட்டியெழுப்புதல் மற்றும் பரஸ்பரம் பொருளாதார, தொழினுட்ப ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்ளுதல்" போன்றவற்றிற்காக சீனாவால் வழங்கப்பட்ட 12 மில்லியன் அமெரிக்க டொலரின் ஒரு பகுதியாகவே இங்கு குறிப்பிடப்பட்டுள்ள 9 மில்லியன் அமெரிக்க டொலர் உள்ளடங்குகின்றது என திறைசேரியின் வெளியக வளத் திணைக்கள உயர் மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் இரு மில்லியன் அமெரிக்க டொலர், வெள்ளப் பாதிப்பிற்கான மானியமாகவும், 01 மில்லியன் அமெரிக்க டொலரானது அனைத்துலக கற்கைக்கான பண்டாரநாயக்கா மையத்தின் அபிவிருத்திப் பணிக்காக வழங்கப்பட்டுள்ளது.

இதேபோன்று கடந்த ஆண்டு யூன் மாதத்தில், சிறிலங்காவில் உள்ள இளையோர்கள் மத்தியில் தகவல் தொழினுட்ப அறிவை விருத்தி செய்யும் நோக்குடன் 500,000 அமெரிக்க டொலர் நிதியை சீனாவானது நாமல் ராஜபக்சவிடம் வழங்கியது.

சிறிலங்காவின் அதிபரிடமும் அவரது மகனிடமும் அவர்களது தனிப்பட்ட விருப்பத்திற்கு அமைய நிதியைச் செலவழிக்கும்படி ஒரு வெளிநாட்டு அரசாங்கம் மானியம் வழங்கியமை சிறிலங்கா வரலாற்றில் இதுவே முதற் தடவையாகும்.

இது தொடர்பாக சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்கவிடமும், மற்றும் நாமல் ராஜபக்சவிடமும் தொடர்ச்சியான தொலைபேசி அழைப்புக்களை மேற்கொண்ட போதும் எந்தவொரு பதில்களும் கிடைக்கவில்லை.

இறுதியில் இந்த விடயம் தொடர்பாக சிறிலங்கா அதிபரின் ஊடகப் பிரிவுப் பொறுப்பாளர் பந்துல ஜெயசேகராவைத் தொடர்பு கொண்டோம். இன்னமும் ஒரு வாரத்தில் இது தொடர்பான பதிலை லலித் வீரதுங்க தெரிவிப்பார் என அவர் தெரிவித்தார்.

சிறிலங்காவானது வெளிநாடுகளிடமிருந்து, கடன் மற்றும் மானியமாகப் பெற்றக் கொண்ட மொத்தத் தொகையில் 54 வீதமானவை அதாவது 2.2 பில்லியன் அமெரிக்க டொலரானது சீனாவிடமிருந்து பெறப்பட்டது என வெளியக வளத் திணைக்களத்தின் 2009ம் ஆண்டு வெளியிடப்பட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2010 ல் சீனாவானது சிறிலங்காவில் மேற்கொண்ட திட்டமானது 40 வீதமாகவும், ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் யப்பான் ஆகிய ஒவ்வொன்றும் 15 வீதமான திட்டங்களை மேற்கொண்டுள்ளன. அதே ஆண்டில், சீனாவிடமிருந்து பெறப்பட்ட கடன் மற்றும் மானியமானது முன்னரைவிட அதிகமானதாகும்.

நவம்பர் 2010 இலிருந்து சீனாவிடமிருந்து பெறப்பட்ட மற்றும் தீர்மானிக்கப்பட்ட கடனின் அளவானது 3.4 பில்லியன் அமெரிக்க டொலராக உள்ளது.

சிறிலங்காவிற்கு வழங்கப்படும் சீனாவின் நிதியில் பெருந்தொகையானது வட்டி வீதத்திற்கேற்பவே வழங்கப்பட்டுள்ளது. சீனாவின் வட்டி வீதமானது ஏனைய வெளிநாடுகளிடமிருந்தும் மற்றும் பன்முக அமைப்புக்களாலும் அறவிடப்படும் வட்டிவீதத்திலும் விட உயர்வானதாகும்.

சீனாவிடமிருந்து சிறிலங்காவால் பெறப்படும் கடனுதவியானது வாங்குவோர் கடனுதவி, முன்னுரிமைப்படுத்தப்பட்ட வாங்குவோர் கடனுதவி, சலுகை அடிப்படையிலான கடனுதவி என பிரதானமாக மூன்று வகைப்படுத்தப்படுகின்றது.

சீனாவால் குறைந்த சந்தை வட்டியுடன் கூடிய கடனுதவி மற்றும் மானியம் என்பன மிகக் குறைந்தளவிலேயே வழங்கப்படுகின்றது. வாங்குவோர் கடனுக்கான வட்டியானது வழமையாக 6.5 தொடக்கம் 7 சதவீதமாகவும், முன்னுரிமைப்படுத்தப்பட்ட வாங்குவோர் கடன் வட்டியானது 5 சதவீதமாகவும், சலுகை அடிப்படையிலான கடன் வட்டியானது 2 தொடக்கம் மூன்று சதவீதமாகவும் காணப்படுகின்றது.

சீன நாட்டு வல்லுனரின் கோட்பாட்டிற்கேற்பவே சிறிலங்காவில், சீன நாட்டின் திட்டங்களை அமுல்ப்படுத்துவதற்கான சீன நாட்டு ஒப்பந்தக் கம்பனிகள் தெரிவுசெய்யப்படுகின்றன.

திட்ட அமுலாக்கலின் போது, உபகரணங்கள். மூலவளங்கள், தொழினுட்ப ஆற்றல், சேவை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு சீனாவானது தனது திட்டத்திற்குப் பொருத்தமான கம்பனியை முன்னுரிமைப்படுத்தும்.

சீனாவிடமிருந்தே இத்திட்டத்தை மேற்கொள்வதற்குத் தேவையான தொழிலாளர்களும் கொண்டுவரப்படுகின்றனர். இவ்வாறான சீனாவின் நடவடிக்கையானது சீனா தனது இலாபத்தை மேலும் அதிகரிக்க வழிவகுக்கின்றது.

உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற உதவி வழங்கும் அமைப்புக்கள் 0.25, 02, 03 சதவீதங்களில் சந்தை வட்டியிலும் குறைந்த வட்டிவீதத்தில் கடனுதவிகளை அதிகளவில் வழங்குகின்றன. ஆனால் இவ்வாறான உதவி வழங்கும் அமைப்புக்களுக்கு, சிறிலங்கா அரசாங்கமானது பல்வேறு கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது.

செய்தி வழிமூலம்: The Sunday Leader
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger