Headlines News :

Meenakam News World

Home » , , , , , , » சிறுமிகளை எங்கு அழைத்துச் செல்கிறார்கள்? திடுக்கிடும் தலைநகரத் தகவல்கள்.

சிறுமிகளை எங்கு அழைத்துச் செல்கிறார்கள்? திடுக்கிடும் தலைநகரத் தகவல்கள்.

Written By Eve on Friday, October 7, 2011 | 1:42 AM

பானு, வயது 13 (பெயர் மாற்றப்பட்டுள்ளது). புறக்கோட்டை பஸ்நிலையத்தில் இரவு எட்டு மணியளவில் பிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறாள்.

அதிகம் பேசாமல் சோர்ந்த முகத்தோடு காட்சியளித்த அவளுக்கருகில் பானுவின் அம்மாவும் இருக்கிறார்.

அன்று உலகளாவிய ரீதியில் சிறுவர் தினம் கொண்டாடப்பட்டுக் கொண்டிருந்த அக்டோபர் முதலாம் திகதி.

“மகளுக்கு வீடொன்றில் வேலை வேண்டும். வேலை இருந்தால் சொல்லுங்கள்.  இல்லாவிட்டால் அந்த நாய்களுக்கு என் மகள் தீனியாகிவிடுவாள்” – இது பானுவின் தாய் வெளிப்படுத்திய வார்த்தைகள்.

நாய்கள் எனச் சுட்டிக்காட்டியது யாரை என்பது கேள்விக்குறியானது. யாரோ ஒருவரால் அல்லது ஒரு கூட்டத்தினரால் எதற்காகவோ சிறுவர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள் என்பது புலனானது.

அதனை உறுதி செய்துகொள்ள தொடர்ந்து பேசத்தொடங்கினோம்.

முயற்சி பலனளிக்கவில்லை. அந்தப் பெண்ணுக்கு அதுபற்றித் தெரியாது என்றும் கூறினார். எனினும் ஏதோ ஓர் ஏக்கம் அந்தப் பெண்ணின் கண்களில் தெரிந்ததை மறைக்க முடியவில்லை.

இந்தச் சிறுவர்களை யார் அழைத்துச் செல்கிறார்கள் ? அங்கு என்ன நடக்கிறது எங்கே கொண்டு செல்கிறார்கள் என்ற கேள்விக்கு முழுமையான பதில்களைப் பெற முடியவில்லை.

அத்துடன் தொடர்ந்து அந்த இடத்தில் எமக்கு இருக்க முடியவில்லை. வித்தியாசமான பார்வையில் பலர் எம்மை நோக்கினார்கள். காலம் தாமதமானால் அசம்பாவதிங்கள் அதிகரிக்கப்படலாம் என்பதால் அங்குள்ள மேலும் சில பிச்சைக்காரர்களிடம் வினவினோம். தமக்கு எதுவும் தெரியாது எனக் கூற மறுத்துவிட்டனர்.

நீங்கள் யார் என எமக்குத் தெரியாது அதனால் சொல்ல முடியாது என சிலர் கூற மறுத்துவிட்டனர்.

சுமார் அரை மணி நேரமாக அங்கு நடமாடிக் கொண்டிருந்த பாலியல் தொழிலாளியிடம் இது பற்றி பேச முயற்சித்தோம்.

ஆரம்பத்தில் சற்றுத் தடுமாறினாலும் பின்னர் யாருக்கும் சொல்ல வேண்டாம் என சில தகவல்களை கூறினார் அப்பெண்.

இந்தக் குழுவினர் தினமும் வருவதில்லை. ஒரு கிழமைக்கு இரண்டு தடவைகள் வருவார்கள். சில மாதங்களில் வருவதில்லை. அப்படி வரும்போது சிறுமிகளையும் சிறுவர்களையும் இனிப்பு கொடுத்து அழைத்துச் செல்வார்கள்.

பிச்சை எடுத்துப் பழகிய சிறுவர்கள் பயமின்றி பிச்சைக்காக செல்வார்கள். இரவில் அழைத்துச் செல்லும் சிறுவர்களை அதிகாலைப் பொழுதில் மீண்டும் விட்டுவிடுவார்கள்.

பெற்றோரின் அனுமதியுடன் செல்லும் சிறுவர்களை தெமட்டகொட பகுதிக்கு அழைத்துச் செல்வதாகத்தான் எமக்குத் தெரியும்.

இது பற்றி யாரிடமும் கேட்க முடியாது. சிறுவர்களும் கூற மறுத்துவிடுவார்கள்.

நாங்கள் கேட்க முயற்சிப்பதில்லை. கேட்டால் சில வேளைகளில் எங்களுக்கு இந்த இடத்தில் தொழில் செய்ய முடியாமல் போய்விடும்.

நாங்கள் ஆராய்ந்து பார்த்ததில் பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவே சிறுவர்கள் அழைத்துச் செல்லப்படுகிறார்கள் என்பது தெரியவந்தது.

ஆட்டோவில் இருவர் வருவார்கள் சில நாட்களில் இரண்டு ஆட்டோக்களில் சிலர் வருவார்கள். அப்படி வருபவர்கள் பிள்ளைகளின் பெற்றோருக்குப் பணம் கொடுத்துவிட்டு சிறுவர்களை அழைத்துச் செல்வார்கள் என்கிறார் அந்தப் பெண்.

ஆம்! சிறுவர்களும் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு ஆளாக்கப்படுகிறார்களா அல்லது வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறார்களா என்ற சந்தேகம் எழுகிறது.

நாம் அந்தப் பாலியல் தொழிலாளியுடன் பேசிக்கொண்டிருந்தபோது அங்கு மீண்டும் வந்தார் பானுவின் அம்மா.

அவள் சொல்லுவதெல்லாம் உண்மை. வனாத்தமுல்லைக்குத் தான் (தெமட்டகொடையில் மாடுகள் வெட்டப்படும் ஒரு காட்டுப்பகுதி) அழைத்துச் செல்வார்கள்.

அங்கு மதுபோதையில் இருப்பவர்கள் எமது பிள்ளைகளை தமது பாலியல் தேவைகளுக்காகப் பயன்படுத்துவார்கள். என்னவென்று தெரியாத சிறுவர்களும் அதற்கு இணங்குவார்கள்.

தாம் கூறுவதுபோல் செய்யாவிடின் கொலை செய்துவிடுவதாகவும் ஓடும் ரயிலில் தள்ளிவிடுவதாகவும் மிரட்டுவார்கள்.

அவர்கள் தினமும் மது அருந்துவதில்லை. காட்டுப்பகுதியில் மது அருந்தும்போது தான் அவர்களுக்கு இப்படியொரு விபரீத ஆசை வரும்.

இதை நான் சொன்னேன் என வெளியில் யாருக்கும் சொல்லாதீர்கள் எனக் கூறியவாறே தன் மகளின் கரங்களை அழுத்தமாய் பிடித்தவண்ணம் சென்றுகொண்டிருந்தார் அவர்.

இது வெளியில் வராத உண்மை. பாதிக்கப்படுபவர்களும் பயம் காரணமாகச் சொல்வதற்கு முன்வருவதில்லை.

எனினும், சுய இச்சைக்காக சிறுவர்களை அழைத்துச் சென்று கொடுமைசெய்யும் இந்தக் கூட்டத்தைக் கண்டறிய எமது வணக்கம் செய்திக்குழு தயாராகவே இருக்கிறது.

Share this article :

1 comment:

Ramya Parasuram said...

copied from http://www.vanakkamnet.com/prostitution-in-colomb/

do not steal news

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger