மட்டக்களப்பு நாவற்குடாவில் இன்று காலை 8மணியளவில் ஆசிரியை ஒருவரை தாக்க முற்பட்ட மர்ம மனிதனை அப்பிரதேச மக்கள் பிடித்து நாவற்குடா மைதானத்தில் கட்டி வைத்து அடித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.சம்பவத்தை அறிந்த காத்தான்குடி காவல்துறை பொறுப்பதிகாரி அம்மைதானத்திற்கு சென்று மர்மமனிதன் என கருதப்பட்டவரை பொதுமக்களிடமிருந்து மீட்டு காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றார்.காவல்துறையினர் மர்ம மனிதனை காப்பாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என குற்றம் சாட்டிய அப்பகுதி இளைஞர்கள் ஆர்ப்பாட்டம் செய்ததுடன் வீதிகளுக்கு குறுக்கே ரயர்களை போட்டு ஏரித்து பதற்றமான சூழலை ஏற்படுத்தினர்.சம்பவத்தை அறிந்த இராணுவத்தினர் அங்கு வந்து பொதுமக்கள் மீது தடியடி பிரயோகத்தையும் செய்தனர்.
சம்பவத்தை அறிந்த மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் காத்தான்குடி காவல்நிலையத்திற்கு சென்று கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் நிறுத்துமாறு கோரிக்கை விடுத்தார்.
இதேவேளை கைது செய்யப்பட்ட நபர் இன்று முற்பகல் மட்டக்களப்பு மாவட்ட நீதிபதி முன்னிலையில் நிறுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் 23ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.இப்பகுதியில் காலையில் ஏற்பட்ட பதற்ற நிலை தற்போது தணிந்துள்ளதாகவும் எனினும் அப்பகுதியில் பெருமளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருப்பதாகவும் நமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.





நன்றி : தினக்கதிர்
No comments:
Post a Comment