Headlines News :

Meenakam News World

Home » , , , , , , » ஈழத் தமிழர் நிலையை கருத்தில் கொண்டு பிறந்த நாளைக் கொண்டாடவில்லை- சரத்

ஈழத் தமிழர் நிலையை கருத்தில் கொண்டு பிறந்த நாளைக் கொண்டாடவில்லை- சரத்

Written By Eve on Wednesday, July 13, 2011 | 7:59 AM

ஈழத்தில் நிலவி வரும் அவல நிலையைக் கருத்தில் கொண்டு எனது பிறந்த நாளையொட்டி எந்தவித கொண்டாட்டத்திற்கும் நான் ஏற்பாடு செய்யவில்லை என நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.எனது ரசிகர்களும், சமத்துவ மக்கள் கட்சியினரும் ஏழை எளியோருக்கு நல உதவிகளை வழங்கி கொண்டாடுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று நடிகரும், தென்காசி எம்.எல்.ஏவும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள், ஈழத்தமிழர்கள் நிலை குறித்து நிரந்தர துயரம் கொண்டிருப்பதை நாம் அறிவோம். ஈழத்தில் தவித்துக் கொண்டிருக்கும் தமிழர்களின் இன்றயை நிலை உலகில் எந்த நாட்டு மக்களுக்கும் ஏற்படக்கூடாத ஒன்று.

இலங்கை அதிபர் ராஜபக்சே போர்க்குற்றவாளி என்று உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. தமிழர்களின் நலன் காக்க இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் அறிவித்ததோடு, தமிழக சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கையில் முள்வேலி முகாமில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களின் நிலை என்ன என்பது இதுவரை முழுமையாக தெரியவில்லை. போரில் கடுமையான பாதிப்புக்குள்ளான தமிழர் பகுதிகளில் மறு சீரமைப்பு பணிகள் நடக்கிறதா, நடக்கவில்லையா என்ற விபரம் தெரியவில்லை.

ஒரு தமிழன் கூட இடம் பெறாத அதிகாரிகள் கொண்ட குழுவை மத்திய அரசு அவ்வப்போது கண்துடைப்பிற்காக இலங்கைக்கு அனுப்பி வருகிறது. அதனால் எந்த ஒரு நிலையான பயனும் ஏற்படவில்லை. மேலும், இந்தியாவின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் ஆபத்தை உருவாக்கும் விதமாக, சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளோடு இலங்கை நெருங்கிய உறவை ஏற்படுத்திக்கொள்ளும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

இலங்கையில் ஹம்பன் தோட்டா என்ற இடத்தில் , சீனா துறைமுகம் அமைக்க இலங்கை அனுமதி அளித்துள்ளது. கச்சத்தீவையும், சீனாவின் உபகோயத்திற்கு பயன்படுத்திக் கொள்ள இலங்கை அனுமதிக்கக்கூடும்.இத்தகைய சூழலில் கச்சத்தீவை நாம் மீட்டே ஆக வேண்டும். தமிழக முதல்வர் கச்சத்தீவை மீட்க மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சிகளுக்கும் உலகத் தமிழர்கள் ஒட்டுமொத்த ஆதரவையும் வழங்கிட வேண்டும்.

இந்தச் சூழ்நிலைகளால் என்னுடைய பிறந்ததினமான நாளை (14.07.2011) எந்தவொரு விரிவான நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்படவில்லை. வழக்கமாக என்னை நேரில் சந்தித்து வாழ்த்த வரும் தோழர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் தாங்கள் இருக்கும் இடங்களில் ஆங்காங்கே உள்ள ஏழை, எளியோருக்கும், மாணவர்களுக்கும் தேவையான உதவிகளை செய்ய வேண்டும்.

இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமான நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்து, எளியமுறையில் கொண்டாட வேண்டும். எனது இல்லத்திற்கு நேரில் வந்து வாழ்த்துச் சொல்வதை தவிர்க்க வேண்டுமாய் அன்போடு கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் எங்கிருந்து வாழ்த்தினாலும் நேரில் வாழ்த்து பெற்றதாக மகிழ்ச்சியடைவேன் என்று அவர் கூறியுள்ளார்.
Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. தமிழீழ செய்திகள் - All Rights Reserved
Template Modify by Creating Website Inspired Wordpress Hack
Proudly powered by Blogger